இறைவர் : அருள்மிகு ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் சுவாமி
இறைவி :ஸ்ரீ சவுந்தரிய நாயகி
தல மரம் :வில்வம் மரம்
தீர்த்தம் : சூரிய தீர்த்தம், காசிப தீர்த்தம், அக்னி தீர்த்தம்,
அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீ சவுந்தரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர், அழகியநாதர் திருக்கோயில் திருப்பூந்துருத்தி, திருவாரூர்
பித்ருக்கள் சாபம் நீக்கும் திருப்பூந்துருத்தி:
காசிப தீர்த்தம், இத்தலத்தில் சோமாஸ்கந்த மண்டபத்தை அடுத்துள்ள பகுதியில், தென்கிழக்கு மூலையில் கிணறு வடிவில் உள்ளது. இந்தத் தீர்த்தத்தின் அருகில் ஆதி விநாயகர், சம்பந்தர், அப்பர், பரவை மற்றும் சங்கிலி நாச்சியார் சமேத சுந்தரர் ஆகியோர் உள்ளனர். இந்த ஆலயத்தில் அமாவாசை தோறும் கிரிவலம் நடைபெறுகிறது. அதிலும் 🔸ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம்.தெய்வ வழிபாட்டில் குறைகள், தென்புலத்தார் எனப்படும் பித்ருக்களுக்கு செய்யவேண்டிய கடமைகளில் தவறுதல் போன்றவற்றினால் ஏற்படும் துன்பங்களுக்கும் இடர்களுக்கும் தீர்வு அளிக்கும் தலமாகவும், பித்ருதோஷ நிவர்த்தி தலமாகவும் பரிகாரத்தலமாகவும் விளங்குகின்றது திருப்பூந்துருத்தி.
தல வரலாறு:
பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. இது சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரிய நாயகி ஆகும். திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும். இந்த ஆலயத்தில் 🔹ஒரே கிணற்றில் 13 தீர்த்தங்கள் சங்கமித்த நிகழ்வு நடந்திருக்கிறது. அதற்கு ஒரு புராணக் கதை இருக்கிறது ஒருமுறை முனிவர்கள் பலர் ஒன்று கூடி பேசிக்கொண்டிருந்தனர். "ஆடி அமாவாசை அன்று, வேதாரண்யம், தனுஷ்கோடி, சங்கமுகம், திருவேணி சங்கமம், கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, காவிரி, சிந்து, பிரம்மபுத்ரா, தாமிரபரணி, ராமேஸ்வரம் ஆகிய பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடினால் பெரும் புண்ணியம் கிடைக்கும்; பித்ரு சாபங்கள் விலகும். எனவே இந்த 13 புனித தீர்த்தங்களிலும் ஆடி அமாவாசை தினத்தில் நீராடி ஈசனை வழிபட வேண்டும் என்கின்றன புராணங்கள். ஆனால் இது யாரால் சாத்தியமாகும்" என்பதாக அவர்களின் பேச்சு இருந்தது. அப்போது அங்கிருந்த காசிப முனிவர், "ஏன் முடியாது?!. நான் ஆடி அமாவாசை அன்று இந்த பதிமூன்று தீர்த்தங்களிலும் நீராடி, பித்ரு தர்ப்பணம் முடித்துக் காட்டுகிறேன்" என்றார். பின்னர் அவர் ஈசனை நினைத்து தவம் இருந்தார். பல சிவ தலங்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். அதன் ஒரு பகுதியாக திருப்பூந்துருத்தி வந்தடைந்தார். அங்கும் தவம் இருந்தார். அவரது தவத்தை மெச்சிய ஈசன், ஆடி அமாவாசை அன்று ️காசிபருக்கு, விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதராக திருக்காட்சி கொடுத்தார். மேலும் 13 புனித தீர்த்தங்களையும், ஒரே இடத்தில் (திருப்பூந்துருத்தியில்) பாயும்படிச் செய்தார். அந்தத் தீர்த்தம் தற்போது, காசிப தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது. காசிபர் அந்த புனித நீரில் நீராடி, ஈசனையும், அம்பாளையும் அந்த நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டார். அதன் காரணமாக அவருக்கு ஈசனுடன் ஐக்கியமாகும் முக்தி நிலை கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.
திருக்கோயில் முகவரி :
ஸ்ரீ சவுந்தரிய நாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில் திருப்பூந்துருத்தி, திருவாரூர் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில், திருப்பூந்துருத்தி, திருவாரூர் மாவட்டம், .
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்:
.