இறைவர் : அருள்மிகு ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர்
இறைவி :ஸ்ரீ கோமதி அம்மன்
தல மரம் : புன்னை மரம்
தீர்த்தம் : சத்திய தீர்த்தம்
அ ருள்மிகு ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் - களக்காடு
நெல்லை மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி, களா மரங்கள் நிறைந்த காட்டுப்பகுதியாக இருந்ததால், அது திருக் களந்தை என்று அழைக்கப்பட்டது. அந்தக் களக்காடு திருத்தலத்தில், அன்னை கோமதியுடன் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு சத்தியவாகீஸ்வரர். தேவர்கள், சித்தர்கள், முனிவர்கள் வழிபட்ட இந்த ஆலயம் கி.பி. 12ம் நூற்றாண்டில், வீரமார்த்தாண்டவர்மன் என்னும் மன்னனால் கட்டப்பட்டது. ராவணன் சீதையைக் கவர்ந்து சென்ற இடமான இத்தலம் 'சோரகாடவி’ என்றும் அழைக்கப்படுகிறது.
அருள்மிகு ஸ்ரீகோமதி அம்பாள் சமேத ஸ்ரீசத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் - களக்காடு தல வரலாறு.
சீதையின் பிரிவால் வருந்திய ராமன், ஒரு புன்னை மரத்தின் நிழலில் குடிகொண்டிருந்த சிவபெருமானை வழிபட, 'சீதையை மீட்டு வர யாம் துணையிருப்போம்’ என்று சத்தியவாக்கு அருளினார் ஈசன். பின்னர், சீதையை மீட்டுக் கொண்டு ராமன் இத்தலத்துக்கு வந்து, இங்குள்ள இறைவனுக்கு 'சத்தியவாகீசப் பெருமான்’ எனத் திருநாமம் சூட்டி வணங்கிச் சென்றார் என்பது தல வரலாறு. ஒரு போரின்போது, தேவர்கள் இங்குள்ள இறைவனை வழிபட்ட பிறகே, ஈசன் துணையுடன் அசுரர்களைப் போரில் வென்றதாகவும் சொல்லப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்துக்கு 'சத்திய தீர்த்தம்’ என்று பெயர். கோவிலின் வடபுறத்தில் 27 நட்சத்திரங்களுக்கும் மரங்கள் அமையப்பெற்றுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய மரங்களில் ஒரு குடம் நீர் ஊற்றுவது சிறந்த பரிகாரமாகும். ஆலயத்தின் அக்னி மூலையில் தீர்த்தக் குளம் உள்ளது. ராமர் சொல் கேட்டு அக்னிபிரவேசம் செய்த சீதாதேவி, இக்குளத்தில் நீராடி இங்குள்ள சிவனை வழிபட்டதாக ஐதீகம். எனவே இந்த குளத்திற்கு ‘சீதாதேவி குளம்’ என்ற பெயரும் உண்டு. சிற்ப அழகுடன் கூடிய மண்டபங்களும், அவற்றில் மணி மண்டபத்தில் உள்ள இசைத் தூண்களும் இந்தத் திருக்கோயிலின் தனிச் சிறப்பம்சங்கள் ஆகும்! இந்த இசைத் தூண்களைத் தட்டினால், ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொருவிதமான ஒலி எழுவதைக் கேட்கலாம்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில் , களக்காடு , திருநெல்வேலி மாவட்டம் ,
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்கும்.
அமைவிடம்:
திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு. .