இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பால்வண்ணநாதர்
இறைவி :ஸ்ரீ ஒப்பனையம்மாள் அம்மன்
தல மரம் : திருக்களா மரம்
தீர்த்தம் : நிட்சேபநதி - நன்னீர்த் துறை ,சுக்கிர தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ ஒப்பனையம்மாள் அம்பாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி திருக்கோவில் - கரிவலம் வந்த நல்லூர்
இந்திரனின் வாகனமாகிய யானை "கரி' இக் கோயிலைத் தானாகவே சுற்றி வந்து வழிபட்டதால், ""கரிவலம் வந்த நல்லூர்'' எனப்பெயர் பெற்றது. பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய வரலாற்று சிறப்பு கொண்டது இத்தலம்! சங்கரன் கோயிலிலிருந்து சுமார் ஏழு கி.மீ தூரத்தில் இராஜபாளையம் செல்லும் சாலையில் கம்பீரமான ராஜகோபுரத்துடன் காட்சி தருகிறது இவ்வாலயம். இறைவன் ஸ்ரீ பால்வண்ணநாதர். இறைவி ஸ்ரீ ஒப்பனையம்மாள். அமுதம் உண்ட தேவர்களை வெல்வதற்காக அசுரர்கள் பொருட்டு சுக்கிராச்சாரியார் தடாகம் அமைத்து தவமிருந்தார். சிவபிரான் அதில் மூழ்கி வனமாக இருந்த அந்த பகுதியில் பால் போன்ற வெண்மை நிற லிங்கமாக எழுந்தருளியுள்ளார். அதனால் அவர் பால்வண்ணநாதர் என போற்றப் பட்டார்.
தல வரலாறு:
பாற்கடல் கடைந்த பிறகு அதன் முக்கிய நோக்கமான அமிர்தம் வெளிப்பட்டது. அதனை தேவர்கள் உண்டால் பல ஆக்கபூர்வமான பணிகள் நடைபெறும் என்றும் தேவர்களுக்குக் கிடைத்தால், அரக்கத்தனமும் அழிவும் அதிகரிக்கும் என்பதை அறிந்த மஹாவிஷ்ணு அமிர்தத்தை தேவர்களுக்கு மட்டுமே பங்கிட்டளித்தார். இதனால் கோபமுற்ற அசுரர்கள் தம் குலகுருவான சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டார்கள்.
அவர், அவர்களுடைய ஏக்கத்தைப் போக்கும் வகையில் பூலோகத்தில், கருவைப்பதி என்ற தலத்தில் பால் தடாகம் ஒன்றினை உருவாக்கினார். இதைக் கேள்விப்பட்ட தேவர்கள், அந்தத் தடாகத்திலிருந்து அரக்கர்கள் பாலை அருந்தினார்கள் என்றால் அவர்களும் வலிமை பெற்றுவிடுவார்களோ என்று அஞ்சினார்கள். உடனே சிவபெருமானைத் தஞ்சமடைந்தார்கள். அவர் அந்தப் பால் தடாகத்தால் வரவிருக்கும் ஆபத்தினை உணர்ந்து அதனை வெறும் நீர்த் தடாகமாக மாற்றிவிட்டார். அசுரர்கள் ஏமாற்றமடைந்தனர்.
இவ்வாறு பால் தடாகத்தை மாற்றியதால் இங்கே கோயில்கொண்டிருக்கும் ஈசன் பால்வண்ண நாதர் என்றும், சுக்கிரன் உருவாக்கியதால், தடாகம், சுக்கிர தீர்த்தம் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருமுறை இந்திரனுக்கும் அவன் மகனுக்கும் வேடர்களாக மாறும்படி சாபம் ஏற்பட்டது. அதைப் போக்கிக்கொள்ள அவர்கள் இத்தலத்துக்கு வந்து பால்வண்ண நாதரை பூஜித்து வந்தனர். இவ்வாறு இவர்கள் பூஜிக்க, இரவுநேரத்தில் யானை ஒன்றும் வந்து ஈசனை பூஜித்தது.
பமறுநாள் இறைவன் சந்நதிக்குப் போகும்போது ஏற்கெனவே யாரோ பூஜித்துச் சென்றுவிட்டிருந்த அடையாளங்களை இந்திரன் கண்டான். தங்களையும் மீறி யார் இவ்வாறு பூஜித்திருப்பார்கள் என்றறிய இரவில் ஒளிந்திருந்து கண்காணித்தார்கள். அப்போது ஒரு யானை அவ்வாறு பூஜிப்பதைக் கண்டார்கள். உடனே வெகுண்டு அதனைக் கொல்ல அம்பு எய்தபோது அந்த யானை சட்டென்று வெள்ளை யானையாக, ஐராவதமாக மாறியது. தன் தலைவனான இந்திரனைத் தேடி வந்த ஐராவதம் தான் பூஜை செய்த தலத்திலேயே அவனைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டது. ஆமாம், இந்திரனுக்கும் அவன் மகனுக்கும் சாபம் விலகி அவன் சுய உரு பெற்றிருந்தான்! இந்திரன் சாபம் தீர்ந்ததாலும், யானை (கரி) வலம் வந்து வணங்கியதாலும், இத்தலம் கரிவலம் வந்த நல்லூர் என்று பெயர் பெற்றது. மாமுனி அகத்தியரும் இங்கே வந்து ஈசனை வழிபட்டிருக்கிறார்; ஸ்ரீசக்கர பராசக்தியை பிரதிஷ்டை செய்திருக்கிறார். இத்தலத்திற்கு அநாதிபுரம், பாவநாசம், சித்துருவம், ஞானபாசுரம், சிவசக்திபுரம் , அமுதாசலம், சீவன் முக்திபுரி, உபயபுரி, கரிபுரம், அம்பரபுரம், திருக்களாவனம் என்று பல பெயர்கள் உண்டு. கோயிலில் உள்ள சுக்கிர தீர்த்தத்தில் நீராடி அக்னி ஈசனை வழிபட்டதால் அக்னி தீர்த்தம் என்றும் பெயர் கொண்டது. அவ்வாறே அம்பாளும் வழிபட்டதால் தேவிதீர்த்தம் என்றும் சொல்லப்படுகிறது.
கோவில் அமைப்பு :
கோயில் மிக பிரமாண்டமானது. 125 அடி உயர ராஜகோபுரம் கொண்டுள்ளது. கோயிலினுள் விதானத்தில் மூலிகை வர்ணத்தில் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. கொடிமரம், நந்தி, பலிபீடம் எல்லாம் சம்பிரதாயமாக அமைந்திருக்கின்றன. அடுத்து, அகத்தியர், சந்திரன், சூரியன் மூவரும் நம்மை வரவேற்கிறார்கள். கர்ப்பகிரகத்தில் பால்வண்ண நாதர் சுயம்புவாக, வெண்ணிறத்தவராய் காட்சியளிக்கிறார். அக்னி தலம் என்பதால், நம்மை நெருங்கும் தீமைகள் எல்லாம் சாம்பலாகிவிடுவதை உணர முடிகிறது. பிராகார வலம் வரும்போது துர்க்கை, 63 நாயன்மார்கள், சப்த மாதர்கள், தட்சிணாமூர்த்தி, கன்னிமூல விநாயகர் மற்றும் பஞ்சலிங்கம் என பேரின்ம தரிசனம் காணலாம். அன்னையின் தவத்திற்கு மெச்சி காட்சி தந்த ஈசன், லிங்கோத்பவராக கர்ப்பகிரகத்துக்கு பின்புறம் உள்ளார். இங்கோயிலில் வீரஷண்முகர் மிகவும் விசேஷமானவர்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ ஒப்பனையம்மாள் அம்பாள் சமேத பால்வண்ணநாதர் சுவாமி திருக்கோவில் - கரிவலம் வந்த நல்லூர், அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோவில் கரிவலம் வந்த நல்லூர் திருநேல்வேலி மாவட்டம் PIN - 627414
திருக்கோயில் திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்:
இக்கோயில் சங்கரன்கோயில் - ராஜ பாளையம் சாலையில் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. அடிக்கடி பேருந்து வசதி உண்டு. சங்கரன்கோயிலிலிருந்து ஆட்டோவிலும் வரலாம்.