இறைவர் : அருள்மிகு ஸ்ரீ கைலாசநாதர்
இறைவி :ஸ்ரீ பெரியநாயகி அம்மன்
தல மரம் : இலந்தை மரம்
தீர்த்தம் : தீர்த்தம்
அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் - அயனீச்சுரம்
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள நந்திகேச்சுரம், மாகாளேச்சுரம், நாகளேச்சுரம், கோடீச்சுரம், திண்டீச்சுரம், குக்குடேச்சுரம், அக்கீச்சுரம், ஆடகேச்சுரம், அகத்தீச்சுரம், அத்தீச்சுரம் ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும். அயனீச்சுரம் வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகம் திருநாவுக்கரசரின் 6-ம் திருமுறையில் 71-வது பதிகத்தில் 8-வது பாடலில் இந்த வைப்புத் தலத்தைப் பற்றிய குறிப்பு உள்ளது. இப்பதிகப் பாடலில் "ஈச்சுரம்" என வரும் தலங்களை வகுத்து அப்பர் அருளிச் செய்துள்ளார்
தல வரலாறு:
பிரம்மதேசம் ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலுள்ள திருவாலீஸ்வரம் ஊரில் ராஜராஜசோழன் கட்டிய திருவாலிநாதசுவாமி கோவில் உள்ளது. அந்தக் கோவிலுக்கு ராஜராஜசதுரவேதிமங்கலம் என்று அக்காலத்தில் பெயர் பெற்றிருந்த பிரம்மதேசம் ஊரை அந்தணர்களுக்கு தானமாக தந்ததாக வரலாறு குறிப்பிடுகிறது. சோழர்கள் காலத்தில் மிகப் புகழ் பெற்று விளங்கிய. பிரம்மதேசம் மிகவும் வளமான ஊர் என்பதால் அடிக்கடி படையெடுப்புகளும், கள்வர்கள் தொந்தரவும் அதிகமாக இருந்தது. இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்கென ராஜராஜ சோழன் தன்னுடைய படை வீரர்கள் நாலாயிரம் பேரை இங்கு காவல் வைத்திருந்தான்.அந்த வீரர்கள் வழிபட்ட துர்க்கைக்கு நாலாயிரத்தம்மன் என்றே பெயர். இன்றும்கூட நாலாயிரத்தம்மன் கோயில் கைலாசநாதர் கோயிலை ஒட்டியே காணப்படுகிறது. சரித்திர காலங்களில் இத்தலத்திலுள்ள கோவில் ஒரு போர்க்கால அரணாக இருந்துள்ளது. சுற்றிலும் உள்ள நீண்ட மதிற்சுவர்கள் மேல்பாகம் சுமார் 2.5 அடி அகலமுள்ள ஆட்கள் நடமாடவும், வரும் பகைவர்களை கண்காணிக்கவும் உபயோகப்பட்டது. ஆலயத்தின் 7 நிலை இராஜகோபுத்திற்கு மேலே செல்ல படிகள் உண்டு. பிரம்மாண்ட புராணத்தில் சிவபெருமான் பிரம்மதேசம், சிவசைலம் மற்றும் அருகிலுள்ள திருவாலீஸ்வரம் ஆகிய மூன்று தலங்களிலும் சுயம்புவாகத் தோன்றப் போவதாக அத்திரி முனிவரிடம் கூறியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்டிருந்த பிரம்மனின் பேரனான உரோமசமுனிவர் தனது தோஷம் நீங்க, பல இடங்களுக்கும் சென்று சிவனை வழிபட்டு வந்தார். இலந்தை மரங்கள் நிறைந்த வனமாக இருந்த இப்பகுதியில். ஓர் இலந்தை மரத்தின் அடியில் சுவாமி சுயம்பு மூர்த்தியாக இருந்ததைக் கண்டு இவ்விடத்தில் தீர்த்தம் ஒன்றினை உருவாக்கி, சுவாமியை அங்கேயே பிரதிஷ்டை செய்து பூஜித்தார், அவர் பிரம்மஹத்தி தோஷம் நீங்க சிவபெருமான் அருள் செய்தார். உரோமசமுனிவரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவன், இத்தலத்தில் கைலாசநாதராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
கல் சங்கிலி:
உள்ளே கருவறையில் மூலவர் கைலாசநாதர் சுயம்புலிங்க உருவில் காட்சி அளிக்கிறார். கருவறைச் சுற்றில் வல்லப கணபதி, முருகர், சப்தமாதர்கள், தட்சிணாமூர்த்தி, காசிவிஸ்வநாதர், கோமதி சங்கரர், பாலசுப்பிரமணியர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர் ஆகியோரைக் காணலாம். இத்தலத்தின் தலவிருடசம் இலந்தை மரம். இலந்தை மரத்தின் அடியில் பத்ரிவனேஸ்வரர் என்ற இலந்தையடிநாதருக்கு இங்கு தனிச் சன்னதி அமைந்துள்ளது குழந்தைப்பேறு விரும்பி வரும் தம்பதிகள் தாமிரபரணி ஆற்றில் நீராடிவிட்டு இலந்தையடிநாதரை தரிசித்து இங்கு வேண்டிக்கொண்டு, இலந்தை பழத்தை பக்தியுடன் உண்டு வழிபட்டால் அவர்கள் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.. இக்கோவிலில் சரஸ்வதிக்கும் தனி சந்நிதி அமைந்துள்ளது.
தீர்த்தத்தின்_சிறப்பு :
புண்ணிய நதியாம் தாமிரபரணி, கடனா நதி, ராமநதி ஆகிய மூன்றும் சங்கமித்து வடக்கு நோக்கி தாமிரபரணி இங்கே உத்தரவாகினியாக ஓடுவதே தனி சிறப்பாய் கருதப்படுகிறது. உலகில் உள்ள தீர்த்தங்கள் எல்லாம் இவளை உபாசனை பண்ணியே தீர்த்த சக்தி பெறுகின்றன. சிவசக்தி ரூபினியான இவள்(ஆறு) பரமசிவன் அம்சமாகவும், பார்வதி அம்சமாகவும் மற்ற அங்கங்கள் பல்வேறு தேவர்கள் அம்சமாகவும் விளங்குகின்றன என தாமிரபரணி மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது. இத்தலத்தினை சுற்றி இவ்வாற்றில் பதினோரு தீர்த்தங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
கோவில் அமைப்பு :
தாமிரபரணி மஹாத்மியத்தில் அயனீஸ்வரம் என்று குறிப்பிடப்பட்டு இன்றைய நாளில் பிரம்மதேசம் என்று வழங்கும் இத்தலத்திலுள்ள கைலாசநாதர் ஆலயம் கருணையாற்றின் தென்கரையில் ஏழு நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் காணப்படுகிறது. கோபுரத்திற்கு வெளியே பெரிய தெப்பக்குளம் காட்சி தருகிறது.. இராஜகோபுரத்தின் முழு உருவ நிழலும் எதிரேயுள்ள தெப்பக்குளத்தில் விழும்படியாக அமைக்கப்பட்டிருப்பது, கட்டிடக்கலையின் சிறப்பை பறைசாற்றுவதாக உள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்நவுடன் நாம் காண்பது மரத்தால் செய்யப்பட்டதைப் போன்ற நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட கல்லால் ஆன கூரையை உடைய முகப்பு மண்டபம்.. முதன் முதலாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு கணம் அது மரக்கூரையோ என்ற ஐயம் கண்டிப்பாக எழும். ஏனெனில் மரத்தில் செய்யப்படுவது போல அத்தனை நுட்பமான வேலைப்பாடுகள் கொண்டு கல்லால் ஆன இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளது. அதையடுத்து வசந்த மண்டமும், ஒரே கல்லால் ஆன சலங்கை, சங்கிலி மற்றும் ஆபரணங்கள் அணிந்த நுட்பமான வேலைப்பாடுகள் கொண்ட நந்திகேஸ்வரர் திருவுருவம். கோபுர வாயில் வழியே நுழைந்தவுடன் வலது புறத்தில் 20 யாளிகள் தாங்கி நிற்கும் தூண்கள் கொண்ட திருவாதிரை மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் ஒரு தூணில் ராமர் அம்போடு மறைந்திருக்கும் காட்சியும், மற்றொரு தூணில் வாலியும் சுக்ரீவனும் சண்டையிடும் காட்சியும் அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன.. ராமர் சிலை செதுக்கப்பட்டுள்ள தூண் அருகே இருந்து பார்த்தால் வாலி-சுக்ரீவர் செதுக்கப்பட்ட தூணும், அவர்களது உருவமும் நன்கு புலப்படும். அதே நேரம் வாலி-சுக்ரீவர் உருவம் பொறித்த தூணிலிருந்து பார்த்தால் ராமர் இருக்கும் தூண் தெரியாது. இந்த அற்புதமான சிற்பக்கலைத் திறன் ஒவ்வொருவரும் பார்த்து மகிழ வேண்டிய காட்சியாகும்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்பாள் சமேத கைலாசநாதர் சுவாமி திருக்கோவில் - அயனீச்சுரம், அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் அயனீச்சுரம் திருநேல்வேலி மாவட்டம் PIN - 627414
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இவ்வாலயம் காலை 7-30 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5-30 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்
அமைவிடம்:
.