இறைவர் : அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சிரகண்டீஸ்வரர் / வீரட்டானேஸ்வரர்
இறைவி :அருள்மிகு மங்கள நாயகி
தல மரம் :வில்வம் மரம்
தீர்த்தம் : நந்திதீர்த்தம், தக்ஷதீர்த்தம், பிரமதீர்த்தம்,
அருள்மிகு ஸ்ரீ பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கோயில் -திருக்கண்டியூர் தல வரலாறு.
திருக்கண்டியூர் சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும். பிரம்மாவின் 5 தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்த தலம் என்ற பெருமையை உடையது. சாதாதாப என்ற முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ஆதிவில்வாரண்யம் என்றும் பெயருண்டு. இம்முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன், அவருக்குக் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. சாதாதாப முனிவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் திருக்கண்டியூர் சொல்லப்படுகிறது. பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் இத்தலத்தில் மஹாவிஷ்னுவால் நீங்கியது.
சூரிய பூஜை.
இத்தலத்தில் சூரிய பூஜையும் நடைபெறுகின்றது. வருடந்தோறும் மாசி மாதம் 13, 14, 15 தேதிகளில் மாலையில் சூரியனின் கிரணங்கள் வீரட்டேஸ்வரர் திருமேனியின் மீது படுகின்றன.
கோவில் அமைப்பு:
மேற்கு நோக்கி இக்கோவிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் காட்சி தருகின்றது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்தால் நேரே கவசமிட்ட கொடிமரம், நந்தி மற்றும், பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகரும் காட்சி தருகின்றார். வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் தண்டபாணி சந்நிதி தனிக்கோயிலாக வெளவால் நெத்தி அமைப்புடைய மண்டபத்துடன் உள்ளது. அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியது. நின்ற திருக்கோலம். அபயவரதத்துடன் கூடிய நான்கு திருக்கரங்கள். பெயருக்கேற்ற மங்களப் பொலிவு. வலதுபுறம் விநாயகர் உள்ளார். உள் வாயில் கடந்ததும் இடதுபுறம் வள்ளி தெய்வயானையுடன் கூடிய சுப்பிரமணியர் காட்சி தருகிறார். அடுத்து மகாலட்சுமி சந்நிதியும் எதிரில் நடராஜ சபையும் உள்ளது. வலமாக வரும்போது விஷ்ணுதுர்க்கை சந்நிதி உள்ளது. பைரவரும், பலவகை விநாயகர்களும், (வெவ்வேறு வகை மூர்த்தங்கள்) சூரியனும், அமர்ந்த கோலத்திலுள்ள அர்த்தநாரீஸ்வரரும் அடுத்தடுத்துக் காட்சி தருகின்றனர். சண்டேஸ்வரர் சந்நிதி தனிக் கோயிலாகவுள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக பிரமன், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிட்சாடனர் மூர்த்தங்கள் உள்ளன.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில் திருக்கண்டியூர் திருக்கண்டியூர் அஞ்சல் (வழி) திருவையாறு தஞ்சை மாவட்டம் PIN - 613202
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இவ்வாலயம் தினந்தோறும் காலை 6 முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 4 முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்
அமைவிடம்:
அஷ்ட வீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் மற்றொரு பாடல் பெற்ற தலமான திருவையாற்றில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் இருக்கிறது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து உண்டு. .