இறைவர் : அருள்மிகு ஸ்ரீ ஆம்பரவனேஸ்வரர்
இறைவி :ஸ்ரீ மங்களாம்பிகை அம்பாள்
தல மரம் : மரம்
தீர்த்தம் : தீர்த்தம்
அ ருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ ஆம்பரவனேஸ்வரர் கோயில் - கூகூர்
தல வரலாறு:
திரௌபதியோடு சம்பந்தப்பட்ட மாங்கனிக் கதை, பலருக்கும் தெரிந்திருக்கும். அந்தக் கதை, இந்தத் தலத்தில்தான் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது. பஞ்சபாண்டவர்கள் ஒரு முறை கூகூரில் தங்கி இருந்தபோது, மாமரத்தில் இருந்த ஒற்றை மாங்கனியைப் பறித்துத் தருமாறு பீமனிடம் கேட்டாளாம் திரௌபதி. ஆசையுடன் அவள் கேட்ட மாங்கனியை, மரத்தில் இருந்து கீழே விழ வைத்து விடலாம் என்பதற்காக பருமனாகக் காணப்பட்ட மரத்தைப் பிடித்து உலுக்கினான் பீமன். பலன் இல்லை. மரம் அசையவே இல்லை. பிறகு, வந்த அர்ஜுனனாலும் இது முடியவில்லை. பின்னர் நகுலன், சகாதேவன் ஆகியோர் வந்தனர். நான்கு பேர் சேர்ந்து மரத்தை உலுக்கியும் பலன் இல்லை. தருமர் வந்தார். ஐவரும் சேர்ந்து அந்த மாங்கனியை மண்ணில் விழ வைத்து, அதை எடுத்து திரௌபதியிடம் தந்தனர். அவள் அந்தக் கனியை சாப்பிட முற்பட்டாள். அப்போது அந்த வழியே வந்த துறவி ஒருவர், ''என்ன காரியம் செய்து விட்டாயம்மா... இந்த மரத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு மாங்கனி மட்டுமே காய்க்கும். தவசீலரான துர்வாசர் வந்து கேட்டுக் கொண்டால் மட்டுமே மாங்கனி அவர் மடியில் விழும். இந்தப் பழத்தை நீ வைத்திருக்கிறாயே! அம்மா... இது, உன் கையில் இருப்பது அழகல்ல... மீண்டும் மரத்தில் இருப்பதே அழகு'' என்று கூறிவிட்டுச் சென்றார். பாண்டவர்களும் திரௌபதியும் அதிர்ந்தனர். ''தவறு இழைத்து விட்டோம்! தனிப்பட்ட நம் ஒருவரின் முயற்சிக்கே இந்தக் கனி கிடைக்கவில்லை எனும்போதே நாம் விழிப்பாக இருந்திருக்க வேண் டும். துர்வாசர், கோபக்காரர். அவர் வருவதற்குள் பழம், மரத்தில் இருக்க வேண்டும்'' என்ற தருமர், மாயக் கண்ணனால் மட்டுமே இந்தக் காரியம் பூர்த்தி ஆகும் என்று நினைத்து, அவனைப் பிரார்த்தித்தார்.அடுத்த விநாடி ஸ்ரீகண்ணபிரான் அங்கு இருந்தார். ''என்ன தர்மபுத்திரா? என்ன வேண்டும்?''என்று கேட்டார். தர்மரும் நடந்ததைச் சொன்னார். அதன் பின் கண்ணன், ''ஆக, திரௌபதியின் கையில் இருக்கும் இந்த மாங்கனி, மரத்திலேயே - அதாவது முன்பு இருந்த இடத்திலேயே சேர்ந்து விட வேண்டும்... அப்படித்தானே?'' என்று கேட்டார்.சகோதரர்கள் ஐவரும், திரௌபதியும் சேர்ந்து ஒட்டுமொத்தக் குரலில், ''ஆமாம்'' என்று சொல்ல... அந்தக் கனியை மண்ணிலே வைக்கச் சொன்னான் மாலவன். ''நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் மனதில் இருந்து உண்மையான ஒரு தகவலைக் கூற வேண்டும். ஒவ்வொருவரும் சொல்லும் உண்மைத் தகவலுக்கு ஏற்ப, இந்தக் கனியானது மெள்ள மெள்ள மேலே ஏறிப் போய், கடைசியில் திரௌபதி முடிக்கும்போது மரத்தில் ஒட்டிக் கொண்டு விடும். பொய் சொன்னால் கனி மரத்தில் ஒட்டிக் கொள்ளாது'' என்றார். தருமர் முதலில் ஆரம்பித்தார்: ''என் பெரிய தந்தையின் புத்திரன் துரியோதனன் மற்றும் அவனைச் சார்ந்தவர்கள் நல்ல எண்ணங்களுடன் நலமாக வாழ்ந்தால், அனைவருமே சுகமாக இருப் போம். இதுவே நான் சொல்ல விரும்புவது'' என்று அவர் சொல்ல... தரையில் இருந்த மாங்கனி சற்று உயரே எழும்பியது. அடுத்தது பீமன், ''பிறரது குடி கெடுத்த துரியோதனன் மற்றும் அவனுடன் இணைந்தவர் களை- நூற்றியோரு மன்னர்களைக் கண்டதுண்டம் ஆக்குவேன். சகுனியைக் கொல்வேன். துச்சாதன னின் உதிரம் குடிப்பேன். திரௌபதியின் கூந்தலை முடிய வைப்பேன்'' என்று ஆவேசத்துடன் சூளுரைக்க... மாங்கனி இன்னும் சற்று மேலே எழும்பியது. இப்படியே அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி ஆகியோர் தங்கள் மனதில் இருந்த உண்மைக் கருத்தைச் சொல்லச் சொல்ல... கொஞ்சம் கொஞ்சமாக மேலெழும்பிச் சென்ற மாங்கனி, கடைசியில் மரத்தில் ஒட்டிக் கொண்டது. அனை வரும் மகிழ்ந்தனர். 'நல்லவேளை... துர்வாசரின் சாபத்துக்கு ஆளாகாமல் தப்பினோம்' என்று தருமர் நிம்மதி ஆனார். தங்களைக் காப்பாற்றிய ஸ்ரீகண்ணபிரானை அனைவரும் தொழுதனர். இந்தக் கதை நிகழ்ந்தது கூகூர்தான். வரலாற்றிலும் இடம் பெற்ற திருத்தலம் இது. கி.பி.9-ஆம் நூற்றாண்டு இறுதி; 10-ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில்... இந்த ஆலயம் முதலாம் ஆதித்த சோழனால் கட்டப்பட்டது என்றும் இதன் காரண மாக கூகூர் பகுதி, 'ஆதித்தேசுவரம்' என்றும், இங்குள்ள ஸ்ரீஆம்பரவனேஸ்வரர் 'ஆதித்தேசுவரர்' எனவும் அழைக்கப்பட்டதாகக் கல்வெட்டுகள் தெரிவிக் கின்றன. 'திருநறையூர் (நாச்சியார்கோவில்) நாட்டைச் சேர்ந்த கூரூர்' என்றே இந்தப் பகுதி, சோழர் காலக் கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. பரகேசரி வர்மன் இந்தக் கோயிலில் விளக்கு எரிவதற்காக 25 பொற்காசுகள் வழங்கிய செய்தியை ஒரு கல்வெட்டு சொல்கிறது.
பிரார்த்தனை:
இங்குள்ள பைரவர், மிகுந்த சக்தி வாய்ந்தவர். எத்தகைய நோய் இருந்தாலும், பிரச்னைகள் வந்தாலும் தீர்த்து வைப்பவர். தன்னை மனம் உருக பிரார்த்திக்கும் பக்தர்களை என்றுமே இவர் கைவிடுவது இல்லை.
கோவில் அமைப்பு :
பிரமாண்டமான இந்த ஆலயம், மூன்று நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. பலிபீடம், நந்திதேவர் மண்டபம். நுழைந்ததும் நமக்கு வலப் பக்கம் அம்மன் சந்நிதி, தனிக் கோயிலாகக் காட்சி தருகிறது. அன்னையின் ஆலய மண்டபத்தில், அ.ராம.அ.லெ.அ. அருணாசலம் செட்டியார் மற்றும் அவரின் மனைவி ஆகியோரது சிலா வடிவங்கள் உள்ளன. 1946-ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தின்போதுதான் மங்களாம்பிகை சந்நிதியை இப்படி விஸ்தாரமாக எடுத்துக் கட்டிய தாக சொல்லப்படுகிறது. இங்கே அருளும் ஸ்ரீமங்களாம்பிகை, சக்தி வாய்ந்தவள். தெற்கு நோக்கிய சந்நிதியில், நின்ற கோலத்தில் சாந்தமான முகத்துடன் அருள் புரிகின்றாள். நான்கு திருக்கரங்களுடன் விளங்கும் ஸ்ரீமங்களாம்பிகா, சற்றே முன்பக்கம் சாய்ந்த நிலையில் தரிசனம் தருகிறாள். மனம் குளிர வணங்கி விட்டு, பிரதான ஆலயத்தை நோக்கி நகர்கிறோம். ஸ்ரீஆம்பரவனேஸ்வரரைத் தரிசிக்கும் முன் பிராகாரம் மற்றும் இங்குள்ள சிலா திருமேனிகளைத் தரிசித்துவிட லாம். ஒவ்வொரு விக்கிரகமும் சிறப்பான முறையில் கலை நுணுக்கத்தோடு வடிக்கப்பட்டிருக்கின்றன. ஆலயத்தின் உள்ளே ஸ்ரீவிநாயகர், திருஞானசம்பந்தர், அர்ஜுனன், வள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமண்யர், ஸ்ரீமகாலட்சுமி முதலான சிலா வடிவங்களைத் தரிசிக்கிறோம். இந்த ஆலயத்தைப் பற்றிப் பாடியதால் சம்பந்தர் திருமேனி! தல புராணத்தோடு சம்பந்தப்பட்டதால் அர்ஜுனனும், விக்கிரகமாகக் காட்சி தருகிறான்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ ஆம்பரவனேஸ்வரர் கோயில் - கூகூர்,தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் ,
திருக்கோயில் திறக்கும் நேரம்:
நடை திறந்திருக்கும் நேரம்: காலை 6 முதல் பகல் 12 மணி வரை; மாலை 4 முதல் 7 மணி வரை.
அமைவிடம்:
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் இருக்கிறது நாச்சியார்கோவில். இது வைணவ திவ்விய தேசத் தலம். இங்கிருந்து கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் இருக்கிறது கூகூர். நன்னிலத்தில் இருந்து கூகூருக்கு சுமார் 15 கி.மீ. தொலைவு. பிரதான சாலையை ஒட்டி வடதிசையில் கோயில். நடக்கிற தொலைவுதான். கோயிலுக்கு வடக்கே திருமலைராஜன் ஆறு ஓடுகிறது.