இறைவர் : அருள்மிகு ஸ்ரீ நாகநாதர் சுவாமி
இறைவி :ஸ்ரீ சுந்தரநாயகி அம்மன்,
தல மரம் :கருஊமத்தை,வன்னி, கொன்றை
தீர்த்தம் : சப்தசாகரம் தீர்த்தம்
அருள்மிகு சுந்தரநாயகி சமேத நாகநாதர் சுவாமி திருக்கோவில் - திருமறைச்சேரி
நாகநாதர் சுவாமி திருக்கோவில் - திருமறைச்சேரிவேதங்கள் தவம் இயற்றிய தலம், சூரியன் பூஜிக்கும் தலம்-, ராகு வழிபட்டு நலம் பெற்ற தலம், பைரவரின் காணாமல் போன வாகனம் மீண்டும் கிடைக்க அருள் செய்த திருத்தலம்.. .எனப் பல மகிமைகளைத் தன்னகத்தே கொண்டது திருமறைச்சேரி! தென்னாடுடைய சிவனார் நாகநாதர் எனும் திருப்பெயர் ஏற்று, அம்பிகை சுந்தரநாயகி யோடு கோயில் கொண்டிருக்கும் இந்தத் தலம், தற்போது வழக்கில் ‘மாராச்சேரி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தலத்து இறைவனை சூரியன் வழிபட்டதற்கு சாட்சியாக இன்றைக்கும் பங்குனி மாதம் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை சூரியனின் கதிர்கள் நாகநாதரின் திருமேனியில் படுவதாகச் சொல் கிறார்கள். ஒருவரது ஜாதகத்தில் சூரியன் வலிமை குன்றி இருந்தால், இங்கு வந்து நாகநாதரை வழிபட்டால் போதும்; வலுக் குன்றிய சூரியனால் ஏற்படக்கூடிய அசுப பலன்கள் நீங்கிவிடும்
தல சிறப்புகள்:
சிவனுக்கு மிகவும் பிடித்தமானதும், மகாசிவராத்திரியன்று மூன்றாம் காலபூஜையில் அவருக்கு பிரத்யேகமாகச் சாற்றப்படுவதுமான வாசனை மிக்க சிவகரந்தைச் செடி, கைலாயத்தை அடுத்து திருமறைச்சேரியில் மட்டும் உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இதனை கற்ப மூலிகை என்றும் அழைப்பர். ராகு பகவான் வழிபட்டு பாபவிமோசனம் அடைந்ததலம், வருடந்தோறும் ஆதவன் தன் கிரணங்களினால் மூலவரை வழிபடும் ஆலயம். பல வருடங்களுக்கு முன் ஆவுடையார் கோவில் பைரவர் வாகனம் காணாமற்போய் இவ்வூரில் கிடைக்கப்பெற்றதாம். இதன் காரணமாக யாரேனும் தன் உடைமைகளை தவறவிட்டால் இத்தலத்து இறைவனை வழிபட்டு வேண்டினால் திரும்ப அடையலாம் என்ற நம்பிக்கை பக்தர்களிடயே நிலவி வருகின்றது. சிறப்புகள் மிக்க இவ்வாலயம், காலத்தின் கோலத்தால் மிகவும் சிதிலமுற்று வழிபாடுகள் குன்றி, முற்றிலும் அழிந்துவிடும் நிலையில் உள்ளது. குடமுழுக்கு என்ற வைபவம் எந்த நூற்றாண்டில் நடந்தது என்று தெரியவில்லை. இருப்பினும் இடுபாடுகளுக்கிடையில் வீற்றிருந்து ஈசனும், அம்பாளும் அருளுவதில் எந்த குறைபாடும் இல்லை. அற்புத பாணத்துடன் அழகான லிங்க மூர்த்தி. அதற்கு இணையாக சுந்தரநாயகி என்ற பெயருக்கு ஏற்றார்போல் ஜடாமகுடம் தரித்த அம்பிகையின் அழகு மிளிரும் அம்பாளின் கம்பீரத்தோற்றம் காண்போர் கண்களை விட்டு அகல மறுக்கின்றது. நாகநாதனைச் சுற்றி நாகங்கள் சர்வசாதாரணமாக உலாவி வந்தாலும் யாருக்கும் எந்த தீமையும் பயப்பது இல்லை. நந்திகேஸ்வரர், பைரவர், வெட்டவெளியில் ஒரு சிவலிங்கமூர்த்தி ஆகிய மூர்த்தங்களையும் இவ்வாலயத்தில் தரிசிக்கலாம்.
திருக்கோயில் முகவரி :
அருள்மிகு சுந்தரநாயகி சமேத நாகநாதர் சுவாமி திருக்கோவில் - திருமறைச்சேரி நாகை மாவட்டம் ,
திருக்கோயில் திறக்கும் நேரம்:
இக்கோவிலில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 11 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் நடை திறந்து இருக்கும்.
அமைவிடம்:
திருத்துறைப்பூண்டி - திருவாரூர் சாலையில் திருத்துறைப் பூண்டியில் இருந்து சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள மணலி என்ற ஊரில் இறங்கி, அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரத்தில் உள்ள திருமறைச்சேரிக்கு ஆட்டோ மூலம் செல்லலாம்.