தேவாரத் திருத்தலங்கள் என்பவை சைவக்குரவர்களான சம்பந்தர், திருநாவுக்கரசர் என்னும் அப்பர் ஆகிய இருவரும் ஏழாம் நூற்றாண்டிலும் சுந்தரர் எட்டாம் நூற்றாண்டிலும் தாம் இயற்றிய தேவாரப் பாடல்களில் பாடிய 276 சிவத்தலங்கள் [1] ஆகும். இத்தலங்களில் குடிகொண்டுள்ள சிவனைப் பற்றி பத்து பாடல்களைக் கொண்ட பதிகங்களை ஒருவரோ, இருவரோ, மூவரோ பாடியுள்ளனர். தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாடு (32), நடு நாடு (22), சோழ நாட்டு காவிரியாற்றின் வட கரை (63), சோழ நாட்டு காவிரியாற்றின் தென் கரை(128), பாண்டிய நாடு (14),கொங்கு நாடு (7), மலை நாடு (1), துளுவ நாடு (1), வட நாடு (5), ஈழ நாடு (2), புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட காவிரி தென்கரைத் தலமான திருவிடைவாய் மற்றும் திருக்கிளியன்னவூர் ஆகிய இடங்களில் காணப்படுகின்ற 276 சிவன் கோயில்கள் அடங்கும்.